ஆயிரம் அறைகூவல்களை
சந்தித்துவிட்டது
உன் அறியாமை
துளிர்க்கும் சிறகுகளை
வெட்டி விடுகிறது
உன் நீடிய சுயநலம்
நீ எழுதிய தீர்ப்பின்
திராவக நெடி
சூழ்கிறது
கருவறையிலும்
தந்திர நரிகள்
உன்னைச் சுற்றி
நீயோ
மலைச்சுற்றலில்.
வீரப்பரம்பரையென
சிரம் நிமிரும்
உன் முகத்தில்
இன்றைய அசிங்கங்கள்
கூச்செறியும்
உன் பிடறியில்
தொங்குகிறது
பூஜைமணி
வாள் பிடித்த
உனது கை
கணக்கு சொல்கிறது
பாதரேகைகளை
எவரெவரோ ஆரோகணிக்க
இன்று நீ
அவரோகணமாக
அரியின் கர்ஜனை
எதிரொலித்த
உன் சுவர்களில்
நரியின் ஊளை
விருந்தோம்பலுக்கு
பெயர் பெற்ற
உன் வாயிலில்தான்
எதிர்ப்படுகின்றன
ராஜபாளையத்தின் கோரப்பற்கள்
கண்ணகிக்கு சிலையெடுத்த
உன் தெருமுனை மறைவில்தான்
அதிபக்த சிரத்தையோடு நடந்தபடி உள்ளன
விபச்சாரிணி தேவிக்கு
ராக்கால பூஜைகள்
திரையோடு தோலும்
கிழிக்கப் பட்ட ரணக் கஸிவில்
நனைகிறது உன் பக்கங்கள்
உனக்காகவே ஏற்றப்பட்ட சுடர்கள்
அணைந்துவிட்டன காலக் காற்றில்
இன்னும் நீ இருளில்
கதிரவனை திரைமூடிவிட்டு
எரிகல்லின் வெளிச்சத்தில்
எழுதபடுகிறது
உன் இருண்ட சரித்திரம்
அர்த்தம் தெரியாமல் நீ பாடும்
தமிழ்த்தாய் வாழ்த்தை
மிஞ்சியொலிக்கின்றன
முள்ளிவாய்க்காலின் மரண ஓலங்கள்
நீ நீரூற்ற தவறிய
வேர்களின் பிம்பங்கள்
உன் தொண்டையில் நிகழ்த்தும்
துக்க முடிச்சுகளை உதாசீனப்படுத்தி விட்டுத்தான்
நீ விழுங்கும் உணவின் கவளங்கள் நகர்கின்றன
கதறி ஓலித்த அழுகுரல்களை ஏந்தியக் காற்று
வாசல் முன் வந்து நிற்கும் போது
ரிங்டோன்களை மாற்றுவது குறித்து
பேசிக் கொண்டிருக்கிறோம் நாம்
வெற்றியின் மமதையில்
இருளின் தேவதைகள் நிகழ்த்திய
கோர வெறியாட்டங்கள்
திரையிடப் படுகின்றன நம் முன்
ஐயோ ..சீக்கிரம் பார்த்து முடி
முடிந்து விடப் போகின்றன
முடியாமல் நீளும் தொலைக்காட்சி சீரியல்கள்.
No comments:
Post a Comment