நிகழ்ந்து முடிந்த அந்த
கள்ளிப்பாலின் தொண்டைப் பயணம்
நேயங்கள் கொண்டு நிற்கும்
எல்லாக் கரைகளையும் உடைத்து சென்றது
அப்பாவின் முறைப்பும்
பாட்டியின் முணுமுணுப்பும்
அம்மாவின் ஈரத்தை துடைத்துவிட
அதன்
உயிருள்ள கடைசிப் பார்வை
ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்த என்மீதுதானா?
வதங்கிப் போன அப்பூவை
வெள்ளைத் துணியால் சுருட்டி
திண்ணையில் போட்டபடி
ஒப்பாரியை தொடங்கினாள் பாட்டி
சடங்குகளுக்கான மும்முரத்தில் அப்பா
பாலாடையைப் பார்த்துக் கொண்டு அம்மா
அறைக்குள் எதிரொலித்த
அதன் அழுகுரலை மீண்டெடுக்க
யத்தனித்திருந்தேன் நான்.
No comments:
Post a Comment