யாருக்காகவோ நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்
என் கண்களையே பிடுங்க முயற்சி நடந்த போது
இமையில் படிந்த
தூசுகளைக் கூட துடைத்து விட்டவள் நீ
என் வேருக்கடியில்
திராவகம் தெளிக்கும் வேலை நடந்த போது
விழுதுகளின் வலிமையை அதிகப்படுத்தியவள் நீ
பாதையெங்கும்
புதைகுழிகள் அணிவகுத்த போது
பாதங்கள் பதிய மடி தந்தவள் நீ
இழக்க விரும்பாத
என்னால் இழக்கவே முடியாத
ஒரே செல்வம் நீ
யாருக்காகவோ
நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்
உன் வார்த்தைகள் மௌனĩ0;் சிறைகளில்
மறைக்கப்பட்டதால்
என் கனவுகள்
ஆயுள் சிறைகளில் அடைக்கபட்டன.
காற்சலங்கையை அவிழ்த்துவிட்டு
கைவிலங்கை அல்லவா
அணிந்துக் கொண்டாய்
துணிச்சலின் தொடர்பற்று போய்
உன்னை நீயே
வாட்டிக் கொண்டதால்
கனவுகளை எரித்துவிட்டு
கவிதையின் நெற்றியில்
தீற்றிக்கொண்டிருக்கிறேன்
குரல்வளையே நெறிக்கப்பட்ட பிறகு
பந்தயத்தில் எப்படி நான் பாடமுடியும்?
கால்களே சிறைபட்ட பிறகு
வீதியின் விசாலத்தில் எப்படி நான் மகிழ்வது?
கைகளே செயலிழந்த பிறகு
பரிசளிக்கப்பட்ட தூரிகையில்
எதை நான் வரைவது?
எவருடைய இழப்பையோ
நான் கண்டெடுக்கையில்
எனக்கான பொற்குவியல் களவு போய்விட்டது.
ஈரத்தின் வாடையே
இல்லையென்றானதால்
என்
கண்களின் மதகுகள் திறந்துக் கொண்டன
யாருக்காகவோ நீ
வாழத்தொடங்கியபோது
நமக்காக நான்
அழத்தொடங்கினேன்
என் அன்பே
நிரப்ப விரும்பாத
என்னால்
நிரப்பவே முடியாத ஒரே இழப்பு நீ.
No comments:
Post a Comment